Wednesday, January 26, 2011

கவிதை (அ) கருத்தாக்கம்

கடலில் விழுந்தது மழைத்துளி

கடலானது மழைத்துளி


இக்கரை அக்கரை

இன்பம் துன்பம்

இருள் வெளிச்சம்

நன்று தீது

பாபம் புண்ணியம்

நடுவினில் சலனமில்லாமல் ஓடும்

நதி

நிலையாமை


பருவங்கள் மாறும்

உருவங்கள் மாறும்

உள்ளம் மாறும்

கள்ளம் மாறும்

மாறாதது மாறும்

மாறியதும் மாறும்

செய்யப்பட்டது மாறும்

செய்யப்படாதது மாறாது – ஆகாயம்

செயல் மாறும்

செய்விப்பவன் மாறான்

மாற்றத்தையே ஆட்டமாக

செய்பவன் நடராஜன்

என்றும் மாறாதவன் நடராஜன்


வெட்டவெளியில் தோன்றும் கானல்

வெங்காயம்

அச்சத்தை ஆணிவேராய் கொண்ட விருட்சம்

இடம் மாறாமலே

நிறம் மாறும் பச்சோந்தி

தெரிந்ததை விடாது

தெரிவதில் நிலைக்காது

இல்லை ஆதாரம் – கட்டும்

கோட்டை ஏராளம்

விலகவும் வேண்டாம்

பழகவும் வேண்டாம்

விழிப்புணர்வாய்

வேடிக்கை பார்த்தால் போதும்

விளையாட்டு ஓயும்


மர்மம்

மறையாமல் பின் தொடரும்

கர்மம்

கழியாமல் பெருகும் கணக்கு

எப்போதும் இதனோடு பிணக்கு

பிணைந்திருக்கும் உடலால்

பிரிந்திருக்கும் மனதால்

வெறுப்பை நீராய் ஊற்றி

வளர்த்த விஷ விருட்சம்

விடைதெரியாத கேள்வி

வினா தேடும் கேள்வி

பாறையில் செதுக்கப்பட்ட ரோஜா

செயலுக்கு காத்திருக்கும் பலன்

பாவத்தில் ஒருகால்

புண்ணியத்தில் ஒருகால்

ஆனாலும் ஊனம்

ஊருக்கு ஒரு பேச்சு

உள்ளுக்குள் ஒரு பேச்சு

யாருக்கு இந்த வாழ்க்கை

எல்லாம் நச்சாய் போச்சு

உள்ளே போடும் வண்ணம்

உலகில் தோன்றும் வண்ணம்

பச்சைக்கு பச்சை

சிவப்புக்கு சிவப்பு

போராட்டம் நிற்க நடத்தும்

போராட்டம்

பிறர் இழுப்புக்குச் செல்லும்

தேரோட்டம்

நிலைக்கு வந்து நிற்குமா

தேர்?

கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்

நான் யார்?


நேற்றைக்கு அவன்

இன்றைக்கு இவன்

நாளைக்கு எவன்?

எனினும் எப்போதும்

எல்லோர்க்கும் இறுதியில்

எமன்!


வாழ்க்கை

வட்டமோ முக்கோணமோ

சதுரமோ நீள்சதுரமோ

எவையானாலும் என்ன

துவங்கிய இடத்தில்

முடியும் போதே

எல்லாம் முழுமையாகிறது.


உன்னைப் பாராமலிருக்க

உன்னோடு பேசாமலிருக்க

மைல்கள் பல கடந்து வந்துவிட்டேன்.

பிரியாமல் என்னோடு எனக்குள்

உறவாடி பயணித்து வந்த உன்னை

எங்கே எப்படித் தொலைப்பேன்?

ஆற்றுப் பெருவெள்ளம் கடக்க

பஞ்சு முட்டைகளால்

பாலம் அமைக்க

முயன்றது போலனது

என் காதலை

நான் கடக்க முயற்சிப்பது.


ஐம்புலன் உணர்விற்கு

அடங்காதிருத்தலே

சுதந்திரம்.


தனிமை வேண்டுமா

கூட்டம் வேண்டுமா

குரு வேண்டுமா

அருள் வேண்டுமா

எது வேண்டும்

தன்னைத்தான் அறிய

அறிய

’தான்’ மட்டும் போதாதோ


மகிழ்ச்சியினால் இணைந்தோம்

மகிழ்விற்க்காக பிரிந்தோம்

மகிழ்பவனும் மகிழ்ச்சியும்

வெவ்வேறாய் போக

மகிழ்தல் அனாதயாய்



-ஸ்ரீசக்திப்ரியன்


Wednesday, January 5, 2011

இடும்பைக்கு இடும்பை படாஅதவர்

நீங்கள் எந்தக் கோவிலுக்கும் சென்று இறைவனை வணங்க வேண்டாம், எந்த கடினமான தத்துவத்தையும் கற்க வேண்டாம், வாழ்வை உணர்வதற்காக எந்த விதமான கடுமையான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம். ஏதாவது மூன்றே மூன்று திருக்குறளைத் தேர்ந்தெடுத்து அதை வாழ்வின் எல்லாப் பொழுதும் கடைபிடித்தாலேயே போதும். வாழ்வின் ரகசியம் விளங்கிவிடும் என்று எனது நண்பர் திரு. மோகன் ரங்கன் அவர்கள் கூறுவார்.

சமீபத்தில் அவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது இடுக்கண் அழியாமையில் இருந்து 628-வது குறளின் சிறப்பை எனக்கு தெரிவித்தார். இப்படி யாராவது நமக்கு உரைத்துவிட்டால் அதன்மேல் ஆர்வம் வந்துவிடுமே. உடனே திருக்குறள் புத்தகத்தை தேடி அந்த அதிகாரம் முழுவதையும் படித்தேன்.

அதில் கீழ்க்காணும் குறள்கள் வருகின்றது.

628. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.

629. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.

இரண்டு குறள்களும் மேலோட்டமாக காண்கையில் ஒரே பொருளைத் தருவதாக உள்ளது. ஒரே கருத்தை வலியுறுத்துவதற்காக திருவள்ளுவர் இரண்டு குறள்களை வழங்கியிருக்கமாட்டார் என்பது என் எண்ணம்.

மேற்கூறிய எனது நண்பரிடம் இதுப்பற்றி வினவினேன். அவர் அளித்த பொருளை நான் புரிந்துக் கொண்ட அளவில் இதற்கு விளக்கம் அளிக்க முயற்சிக்கிறேன். குற்றம் இருப்பின் திருத்தவும்.

முதல் குறள் சொல்லுவது, துன்பத்தினால் வருந்துதல் இல்லாத ஒருவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்றால் அவன் இன்பம் என்று நினைத்து எதையும் தேடமாட்டான்., ஏற்றமும் சரிவும் ஒரே மலையில் இருப்பது போல் இடர் வருகையில் வாழ்வின் இயல்பாக அதையும் ஏற்றுக் கொள்வான்.

இரண்டாம் குறள் சொல்லுவது, தான் தேடாமலே வருகின்ற இன்பத்துள்ளும் இன்பத்தை அனுபவிக்க விரும்பாதவன், தானாக தேடாது வருகின்ற துன்பத்துள்ளும் துன்பத்தை உணரமாட்டான்.

முதல் குறள் இன்பம் தேடுதல் இலாது இருப்பதையும் அடுத்த குறள் தேடாது வருகின்ற இன்பத்தை நுகராது இருப்பதையும் வலியுறுத்துகிறது. ஏனெனில் இன்பத்தின் மறுபக்கமாக துன்பமும், துன்பத்தின் மறுபக்கமாக இன்பமும் இருப்பதை அதை வாழ்வின் இயல்பாகக் கற்றுணர்ந்தவர்கள் கருதுகிறார்கள்.

இத்தகையவர்கள்தான் துன்பத்திற்கே துன்பத்தை அளிப்பவர்களாக இருக்கிறார்கள். இதோ அந்தக் குறள்:

623. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.

-ஸ்ரீசக்திப்ரியன்