Wednesday, September 7, 2011

அன்பே வெற்றி

ஒருவர் தோல்வியில் இன்னொருவர் வெற்றி என்பது உண்மையான வெற்றியா?
அப்படியாயின் தோல்வியின் வெற்றியைத்தான் வென்றவர் ருசிக்கிறார்.
வெற்றியின் வெற்றியை அல்ல.

வலிமையால் சிறுமையை வீழ்த்துவதா வெற்றி!

இருபுறம் சமவலிமையோடு நின்று போர் புரிந்து
ஒருவர் வீழ்ந்து மற்றொருவர் பெறுவதுமா வெற்றி

எனக்கு கொடுத்த வலியை அதுபோலவோ அல்லது
அதனினும் அதிகமாகவோ உனக்கு கொடுப்பது வெற்றியா?

உன் தீச்செயல் தந்த பாதிப்பை அத்தீச்செயலயே உனக்கு
திரும்பச் செய்து பாதிப்பை ஏற்படுத்த எண்ணும் எண்ணம்
மந்தைக் கூட்டச் சிந்தனை அல்லவா

ஒன்றையே இன்னொன்றும் பிரதிபலித்தால்
தனித்தன்மை எனும் இய்ற்கையை இழத்தலாகாதா!
படைப்பின் சிறப்பை இழப்பதாகாதா!

வீழ்ச்சியின் மறுபயனா வெற்றி

இலக்கைக் கொண்டு அடைவதல்ல வெற்றி
இலக்காய் இருப்பதே வெற்றி

தேடியோ போராடியோ வீழ்த்தியோ பெறுவதல்ல வெற்றி.
அது எப்போதும் இங்கேயே இருக்கிறது யாரும் விளைவிக்காமல்;
எல்லாவற்றையும் தன்னுள் ஒன்றாய் ஒருங்கிணைத்துக் கொண்டு.
தனி வழியாய் இல்லாமல், யாரும் பயணம் செய்ய பொது வழியாய்.

அதன் இன்னொரு பெயர்
“அன்பு”.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

இது குறள் தரும் வெற்றியின் இலக்கணம்
வெற்றியின் வெற்றி.

-சக்திப்ரியன்